பகுப்பு பேச்சு:புறமொழிச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பகுப்பு பேச்சு:வந்தேறிச் சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வந்தேறி என்பது சற்று இகழ்ச்சிக்குரிய சொல்லாக புழக்கத்தில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பகுப்புப் பெயரை மாற்றுவது குறித்துச் சிந்திக்கலாம். திசைச்சொற்கள் சரியாக இருக்குமா?--ரவி 14:34, 9 ஏப்ரல் 2010 (UTC)

  • வந்தேறிச் சொற்கள் என்று பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே. நிறைய பிறமொழிச்சொற்களை நாம், தமிழ் சொற்கள் என்றே கருதுகிறோம். அத்தகையச் சொற்கள் இல்லாமல் நாம் இயங்க முடியாது என்றும் பலர் நினைக்கின்றனர். இந்நிலை நமக்கு இகழ்ச்சியே ஆகும். முன்பு நாம் பயன்படுத்திய பல சொற்களை, படித்தவுடன் புரியுமாறு மாற்றியுள்ளேன். ஏனெனில், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் தமிழ்நாட்டில் இல்லாதவர்களே அதிகம் உழைக்கின்றனர். அவர்கள் படித்தவுடன் புரிந்துகொள்ளும் வகையில் நான் தலைப்பிட்டுள்ளேன்.

ஈரெழுத்துச் சொற்கள் ---> பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்

மூவெழுத்துச் சொற்கள் ---> பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்

கலைச் சொற்கள் ---> பகுப்பு:துறைச் சொற்கள்

திசைச் சொற்கள்---> பகுப்பு:வந்தேறிச் சொற்கள் (இச்சொல்லைப் தமிழறிஞர்:நன்னன் கையாளுவர். அவரது கருத்துகளை தினமும் காலை இந்தியநேரம் 7.45 முதல் 8.00வரை மக்கள்தொலைக் காட்சியில் கேட்கலாம்.)

தற்பொழுது தமிழக மக்களிடையே, தமிழின் தரம், மிகவும் குறைந்துவிட்டதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் தமிழைக் கற்பிக்கும் முறைகளை, கையாளும் வித த்தை மாற்றியமைக்கத் தான் வேண்டும். கலைக் கல்லூரி என்பது போல, கலைச்சொற்கள் என்று கூறும் போதும், திசைச் சொற்கள் என்று கூறும் போதும் அதன் ஆழத்தை முழுமையாக உணர்வதில்லை என்பதே என் கருத்து. த*உழவன் 04:22, 10 ஏப்ரல் 2010 (UTC)

வந்தேறி என்பது விக்சனரியில் நடுநிலைக் கொள்கைக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தோன்றுகிறது. நமது தனிப்பட்ட கருத்துகள் எப்படி இருப்பினும் விக்சனரியில் பங்களிக்கக்கூடிய அனைவருக்கும் உவப்பான சொல்லைப் பயன்படுத்துவது நன்று. இகழ்ச்சி உணர்த்துவதாக இருக்கக்கூடாது--ரவி 15:25, 14 ஏப்ரல் 2010 (UTC)


ஒன்றைச் சொல்ல விழைகிறேன். நல்ல தமிழில் எழுதவேண்டும் என்பது நம்மில் பலரின் அவா. ஆனால் பிறமொழிச்சொற்களை தேவை இருப்பின், ஆங்காங்கே சிறிதளவு பயன்படுத்துவதால் தவறில்லை. கடன் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. தேவை இல்லாமலும், தமிழ்ச்சொற்களை வலிந்து விலக்கியும் பிறமொழிச்சொற்களை ஆள்வதைத் தவிர்ப்பது நல்லது. தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு. கருத்து ஆழப்படும் (ஆழப் பொருள் உணர்த்தும்), பிற சொற்களோடு பல நிலைகளில் இணங்கி நிற்கும், சொற்கள் எளிதாகக் கிளைத்துப் பெருகும். பகுப்பு கடன் சொற்கள் என்று இருப்பது நல்லது. வந்தேறி என்னும் சொல் தவறில்லை என்றாலும், தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய சொல். --செல்வா 02:59, 12 ஏப்ரல் 2010 (UTC)
ஆம். வந்தேறிச் சொற்கள் என்பது அம்மொழிச் சொற்களைப் பேசும் இனத்தவரோடு தொடர்பு படுத்தி தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். கடன் சொற்கள் என்பதில் கூட எனக்கு உடன்பாடில்லை. பலவும் நாம் இல்லாமல் கடன் வாங்கிய சொற்கள் அல்ல. திணிக்கப்பட்ட சொற்கள். --ரவி 15:21, 14 ஏப்ரல் 2010 (UTC)
  • நடுத்தரமான தமிழறிவுள்ள எனக்கு, தற்போதுள்ள பெயரில் எந்த தவறான புரிந்து கொள்ளுதலும் ஏற்படவில்லை. வந்தேறிச் சொற்கள் என்பதனை வந்தேறியச் சொற்கள் என்று மாற்றலாமா? த*உழவன் 05:28, 15 ஏப்ரல் 2010 (UTC)
  • இரவி சொல்லும் கருத்து மிகவும் முக்க்கியமானது. பல சொற்கள் திணிப்புச் சொற்கள், அதுவும் வலிந்து திணித்த சொற்கள்.ஆகவே பிறமொழிச் சொற்கள் என்றோ புறமொழிச்சொற்கள் என்றோ புறச்சொற்கள் என்றோ கூறலாம். திசைச் சொற்கள் என்னும் வகைப்பாடு பொருந்தும் என நினைக்கிறேன்.--செல்வா 02:34, 18 ஏப்ரல் 2010 (UTC)
  • தமிழிலக்கியங்களை அகம், புறம் எனப்பிரித்திருப்பது போல, தமிழின் அகத்திலில்லாச் சொற்களை, புறமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது நன்றாக இருக்கிறது. பொருளும் எளிமையாகவும், திண்ணமாகவும் உணர்த்தப் படுகிறது. உணர்த்தியமைக்கு மிக்க நன்றி.அங்ஙனமே மாற்றிவிடுகிறேன்.த*உழவன் 04:11, 18 ஏப்ரல் 2010 (UTC)
  • வந்தேறிச் சொல் என்பது தமிழ் வழக்கத்தோடு பொருந்திப் போகாது என கருதுகிறேன். தமிழ் மரபில் உள்ள திசைச் சொல் என்பதையே நாமும் பயன்படுத்தலாம்.

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப (நன்னூல் : 273) --George46 04:26, 18 ஏப்ரல் 2010 (UTC) உங்கள் கருத்தை ஏற்கிறேன். எனினும் மிக எளிமையான புதியமரபுகளே தமிழைக் காக்கும். உயர்வான தொன்மையான மரபுகள், புதியதாகத் தமிழ் கற்பவருக்கு உதவுவதாகத் தெரியவில்லை. தமிழ் இலக்கியங்களை, தமிழிணையப் பல்கலைக்கழகம், தமிழில்லாத ஆங்கில எழுத்துக்களால் கற்பிப்பது போல, இத்தலைப்பிடலும் ஒரு முயற்சியே. தங்களின் நன்னூல் வரிகளையும் புதியப்பகுப்புரையில் இணைத்துவிடுகிறேன். நன்றி . இப்பகுப்பு இனி பகுப்பு:புறமொழிச் சொற்கள் என்பதில் காணலாம்.த*உழவன் 04:50, 18 ஏப்ரல் 2010 (UTC)

த*உழவன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். "புறமொழிச் சொற்கள்" என்னும் வகையில் ஆங்கிலம் முதலிய மொழிகளிலிருந்தும் வடமொழியிலிருந்தும் வரும் சொற்கள் காணப்படுதலால், திசைச்சொல் குறித்து நன்னூல் கூறுவதைப் "புறமொழிச் சொற்கள்" வகையில் சேர்த்தது போல, வடசொல் பயன்பாட்டையும் அங்கே இணைக்கலாம் என்று கருதுகிறேன். எனவே,

பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்
(நன்னூல் : 274)

(வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்). --George46 19:35, 18 ஏப்ரல் 2010 (UTC)

தலைப்பு - தமிழில் கலந்துள்ள...[தொகு]

இது தமிழ் மொழிக்கு மட்டுமே.. எனவே தமிழில் கலந்துள்ள பிறமொழிச்/புறமொழிச் சொற்கள் என்பதே சரியாக இருக்கும்.

--Natkeeran 16:59, 2 ஆகஸ்ட் 2010 (UTC)